வரும் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் மீன்பிடிக்க தடை...
இராமநாதபுரம்
வரும் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் மே மாதம் 29-ஆம் தேதி வரை 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக இருந்து வந்தது.
இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலமானது 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் தடைகாலம் வருகிற 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் மட்டும் 900-த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன.
தடை காலம் தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையாலும், படகுகள் விடுவிக்கப்படாததாலும் இராமேசுவரத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக குறைந்த அளவிலான விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுவருகின்றன.
கடைசி நாளான நேற்றும் 200 படகுகள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் பெற்றிருந்தபோதும் 100-க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றிருந்தன. 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தடைகாலம் தொடங்கவுள்ள நிலையில் இராமேசுவரம் பகுதியில் மீனவர்கள் படகுகளில் இருந்து மீன் பிடிவலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், கயிறு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை டிராக்டர், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டுச் செல்ல தொடங்கினர்.
இந்தாண்டின் மீன் பிடி தடை காலமானது வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது என்பதால் அன்றிலிருந்து மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.