வாலாஜா,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வாலாஜா அருகே திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய நண்பனின் காதலியை, நண்பன் சொன்னதால், கார் ஏற்றிக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்ட நண்பன் மற்றும் காதலனை காவலாளர்கள் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை அடுத்த தென்கடப்பந்தாங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே கடந்த 30–ஆம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வாலாஜா காவலாளர்கள் விரைந்துச் சென்று அங்கு காயங்களுடன் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்த பெண் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவருடைய மகள் சாந்தி (26) என்பது தெரியவந்தது. எம்.ஏ. பி.எட் படித்துள்ள இவர் வேலைக் கிடைக்காததால் வாலாஜா அரசு மகளிர் கல்லூரி அருகில் உள்ள ஒருகடையில் வேலைபார்த்து வந்தார். 30-ஆம் தேதி தனது தோழிகளுடன் ஓச்சேரியில் உள்ள கோவிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிந்தது.

எனவே, காவலாளர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் உறவினரான வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் நிலவுராஜன் (22), இவருடைய உறவினர் பஜனைகோவில் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் (24) ஆகியோரை பிடித்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

நிலவுராஜனும், சாந்தியும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சாந்தி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிலவுராஜனை கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 30–ஆம் தேதி இரவு காஞ்சிபுரத்திற்கு அவர்கள் காரில் சென்று வந்துள்ளனர். அவர்களுடன் நித்தியானந்தமும் சென்றுள்ளார். அப்போதும் சாந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு நிலவுராஜன் மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாந்தி, தென்கடப்பந்தாங்கல் அருகே கார் வந்தபோது, காரில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். எனவே, ஆத்திரம் அடைந்த நிலவுராஜன், சாந்தி மீது காரை ஏற்றி கொல்லுமாறு கூறியதாகவும், அதன்பேரில் நித்தியானந்தம் காரையேற்றி சாந்தியை கொன்றுள்ளார். என்று காவலாளர்களில் விசாரணையில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் கைது செய்து வாலாஜா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

நீதிபதி உத்தரவின்பேரில் இருவரும் 15 நாள்கள் காவலில் வைக்கப்பட்டனர்.