லாரி கடத்தலில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படை காவலர் உள்பட நால்வர் கைது…
விழுப்புரம்
விழுப்புரத்தில் அரிசி பாரம் ஏற்றிவந்த லாரியை கடத்திய மத்திய பாதுகாப்புப் படை காவலர் உள்பட நால்வரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்
கடந்த 14-ஆம் தேதி கேரளாவில் இருந்து லாரியில் ஏற்றிவரப்பட்ட அரிசி பாரம் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இறக்கப்பட்டது.
இதனையடுத்து, உளுந்தூர்பேட்டையில் உள்ள சேலம் சாலை வளைவுப் பகுதியில் லாரியை ஓட்டுநர் நிறுத்தினார். அப்போது, அங்கு காரில் வந்த நான்கு பேர் ஓட்டுநரை பலமாகத் தாக்கிவிட்டு அவரை காரில் கடத்திச் சென்று சிறிது தொலைவில் கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், லாரியை கடத்திச் சென்றவர்களை பிடிக்க உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஷாகுல்அமீது, உதவி ஆய்வாளர் செல்வவிநாயகம் மற்றும் காவலாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் இந்த உத்தரவை இட்டார்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த தங்கையன் மகனும், மத்திய பாதுகாப்புப் படைக் காவலருமான ஸ்ரீதர் (32), சென்னையைச் சேர்ந்த முத்துக்குமார் (32), குமார் (28), சீர்காழி வட்டம், தாண்டவபுரம் அழகர் மகன் விஜயபாஸ்கர் (27) ஆகியோருக்கு இந்த லாரி கடத்தலில் தொடர்பு இருப்பதை தனிப்படை காவலாளர்கள் சாமர்த்தியமாக கண்டுபிடித்தனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப் பதிந்த காவலாளர்கள் அவர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து கடத்திச் செல்லப்பட்ட லாரி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்து வழக்கை முடித்துவைத்தனர்.