திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க கேமராக்களை பொருத்துங்கள் - மாவட்ட எஸ்.பி, மக்களுக்கு யோசனை...
விழுப்புரம்
மக்கள் தங்கள் பகுதியில் திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என்று விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் யோசனை வழங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில், பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்து நிலைய வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் ரூ.1.50 இலட்சம் செலவில் 10 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகளை பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திலிருந்தபடி, காவலாளர்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் சேவை தொடக்க விழா மற்றும் வியாபாரிகள் நலச்சங்க 18-ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகியவை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கண்காணிப்பு கேமரா சேவையைத் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது: "விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களைக் குறைக்க மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புப் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இருந்த இடங்களில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்க முடியாது. இருப்பினும் குற்ற நிகழ்வுகளை தடுத்தாக வேண்டும். அதற்கு உதவியாக இருப்பதுதான் கண்காணிப்பு கேமராக்கள்.
கேமராக்கள் இருந்தால், சுலபமாக கண்காணிக்க இயலுவதுடன், குற்றவாளிகளை கண்டறியவும் முடியும். இந்த கேமராக்களின் உதவியால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகளை காவலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திண்டிவனம் ஜெயபுரம், வகாப் நகர் ஆகிய இரு பகுதிகளில் தலா 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு, கடந்த மூன்று மாதங்களாக அந்தப் பகுதியில் ஒரு குற்றம் கூட நிகழவில்லை.
ஆகவே, மக்கள் தங்கள் பகுதியில் திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும்.
சென்னை - திருச்சி இடையே முக்கிய பேருந்து நிலையமாக விளங்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இங்கு திருட்டு சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவில், விழுப்புரம் டி.எஸ்.பி. ஜெயக்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், தமிழ்நாடு உள்ளாட்சி கடை வியாபாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் பரமேஸ்வரன், விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் சர்க்கரை, நிர்வாகிகள், கோபி, ஏழுமலை, செந்தில், நரசிம்மன், தனசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.