சீர்காழி அருகே மடவாமேடு கடலில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவரின் சடலம் ஐந்து நாள்கள் கழித்து கரை ஒதுங்கியது.
சீர்காழி அடுத்த மடவாமேடு கடற்கரையில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் புதன்கிழமை அன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் புதுப்பட்டினம் காவலாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், புதுச்சேரி போஸ்நகர் கனிவாய்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் கண்ணன் (15) என்பதும் இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.
கண்ணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேர் கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கண்ணன், அவரது நண்பர் ஆகிய இருவர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலம் ஐந்து நாள்கள் கழித்து, நேற்று மடவாமேடு கடலில் கரை ஒதுங்கியது.
இதற்கிடையில் கண்ணனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் பேரிலும் விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.
கண்ணனின் உடலில் உள்ள அடையாளங்களை அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர். பின்னர், அவரின் உடல் பிரேத பரிசோதனை அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர், கண்ணனின் பெற்றோர் உடலை பெற்றுச் சென்றனர்.
