ரூ.1 கோடி வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கணவன், மாமனார் உள்ளிட்ட ஐவர் கைது…
கோயம்புத்தூர்
ரூ.1 கோடி வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் கொடுத்த புகாரின்பேரில் அவரது கணவர், மாமனார் உள்பட ஐவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் சாலையைச் சேர்ந்த தேவராஜின் மகள் ஜெயஸ்ரீ (27). பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “எனக்கும், சூலூர், சிந்தாமணிப்புதூரைச் சேர்ந்த பி.கோகுல் (29) என்பவருக்கும் 2013 ஏப்ரல் 4-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது எனது பெற்றோர் 120 சவரன் வரதட்சணையாக கொடுத்தனர்.
இந்த நிலையில், எனது கணவர் பி.டெக். முடித்துள்ளதால் சொந்தமாகத் தொழில் தொடங்க எனது பெற்றோரிடம் இருந்து ரூ.1 கோடி வாங்கி வரும்படி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு நான் மறுக்கவே எனது கணவர் கோகுல், மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் நிர்மலா தேவி, கணவரின் அக்கா பிந்தியா, சித்தப்பா ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும், திருமணத்தின்போது எனது பெற்றோர் கொடுத்த நகைகளையும் அபகரித்து விட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவலாளர்கள் கோகுல், பாலகிருஷ்ணன் உள்பட
ஐந்து பேரைக் கைது செய்து, வரதட்சிணைக் கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.