fishermens said only edappadi will be come to kanniyakumari then leave protest

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி குழித்துறையில் மீனவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 

கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். 

சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர். இவர்களை மீட்க கப்பல் படையும் கடலோர காவல் படையும் விரைந்துள்ளன. 

இந்நிலையில், கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க வேண்டும். இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

இதனால் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8 மணி நேரமாக ரயில் மறியல் போராட்டம் நீடிப்பதால் கன்னியாகுமரி ஆட்சியர் மீனவர்கள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

முதலமைச்சர் இங்கு வந்தால் மட்டுமே இடத்தை விட்டு நகருவோம் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.