41 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்…
புதுக்கோட்டை
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 41 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டதால் மீனவ கிராமங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 7–ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி 41 மீனவர்களையும், 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனால் கடலோர பகுதிகளில் இரண்டு நாள்களாக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள மீன்பிடித் தளங்களில் காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 41 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நேற்று ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவ கிராமங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லாததால் மீன்பிடிதளங்களில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.