4-வது நாளாக மீன்வர்கள் கடலுக்கு செல்லவில்லை; தடை காலம் நெருங்குவதால் மீனவர்கள் வேதனை...
நாகப்பட்டினம்
பூம்புகார், தரங்கம்பாடியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், அடுத்த மாதம் மீன்பிடிக்க தடைகாலம் வருவதால் மீனவர்கள் வேதனையில் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வானகிரி, கீழமூவர்க்கரை, திருமுல்லைவாசல், பழையாறு, தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட விசை படகுகள் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வானிலை மாற்றம் காரணமாக இந்திய பெருங்கடலில் குமரிக்கு தெற்கே நான்கு நாள்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. அதுமேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருக்கிறதாம். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 10-ஆம் தேதி முதல் பூம்புகார், வானகிரி, கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரை உள்ளிட்ட கிராமங்களில் கடல் பகுதியில் சீற்றமும், பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
இதுகுறித்து பூம்புகார் பகுதி மீனவர்கள் கூறியது: "கடந்த சில மாதங்களாக வானிலை மாற்றம் மற்றும் வடகிழக்கு பருவமழையால் மீன்பிடி தொழில் மிகவும் மந்தமாக இருந்தது. அந்த நிலைமாறி தற்போதுதான் கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழில் சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளோம். இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை இரண்டு மாதங்கள் மீன்பிடிக்க தடை காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது கடல் சீற்றத்தால் மீன்பிடிக்க செல்லாதது வேதனையாக உள்ளது" என்று அவர்கள் கூறினர்.
இதேபோல தரங்கம்பாடி, சந்திரபாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றத்தால் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.