fisherman bridjo body returned to his parents
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலை 7 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரிட்ஜோவின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமட மீனவர்கள் கடந்த 6 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் உடன் சென்ற ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து துப்பாக்கிசூடு நடத்திய இலங்கை கடற்படை அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமட மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இலங்கை கடற்படை மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

இதை ஏற்காத போராட்டகாரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா சீதாராமன் பிரிட்ஜோவின் உடலை வாங்கி நல்லடக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ராமேஸ்வர மருத்துவமனையில் இருந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மீனவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி இன்று பிரிட்ஜோவின் உடல் இன்று அவரது சித்தப்பா ஜெஷ்டினிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதைதொடர்ந்து பிரிட்ஜோவின் உடல் தங்கச்சிமடத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரிட்ஜோவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
