வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு 54-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; செவிடன் காதில் ஊதிய சங்குதான்..
நாகப்பட்டினம்
காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் 54-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது.
இந்த வங்கியின் முன்பு "பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 18 -ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டம் 54 -வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் குரவப்புலம், கத்தரிப்புலம், செம்போடை ஆகிய கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தரிப்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பாக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜன் தலைமை தாங்கி வருகிறார்.
54 நாள்கள் ஆகியும் இந்த்ப போராட்டத்திற்கு அரசோ, வங்கியோ செவிசாய்க்காமல் செவிடன் காதில் ஊதிய சங்குபோல மௌனமாய் இருக்கிறது.
"நாங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளோம். பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு தொகை தர வேண்டும் தானே? அதனை தர மறுப்பது ஏன்? இழப்பீடு தரமுடியாது என்றால் நாங்கள் ஏன் காப்பீடு செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கேட்கின்றனர்.