உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியம் நிறுத்தப்பட்டதால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு ஒரு மூட்டையின் விலை 1000 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியம் நிறுத்தப்பட்டதால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு ஒரு மூட்டையின் விலை 1000 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் விவசாயம் பிரதானமான ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மகசூல் அதிகரிக்க யூரியா உள்ளிட்ட பல்வேறு வகையான உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதை அடுத்து மத்திய அரசு நேரடியாகவும், தனியார் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கியும் விவசாயிகளுக்கான உரம் தயாரித்து வழங்குகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கடைகளிலும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியம் சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் உரம் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, உரம் வரத்து நிறுத்தப்பட்டதால் 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உரம் கூட்டுறவு சங்கங்களில் ரூ.283க்கும் தனியார் கடைகளில் ரூ.310க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் வரும் நாட்களில், ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குருணை மருந்து உள்ளிட்ட தேவையற்ற சிலவற்றை வாங்கினால் மட்டுமே, உரம் விற்பனை செய்யப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது பல ஏக்கரில் நெல், மரவள்ளி, மக்காச்சோளம் போன்றவை பயிரிடப்பட்டு, நன்கு விளைச்சல் நிலையை எட்டியுள்ளது. உரிய காலத்தில் அதற்கு தகுந்த உரமிட்டால் தான், எதிர்பார்த்த மகசூலை பெறமுடியும். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
