Farmers extortion flooding - farmers struggle against wind farmers
தூத்துக்குடி
விவசாயிகளை மிரட்டி நிலங்களை பறிக்கும் காற்றாலை பண்ணை உரிமையாளர்களை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் கோயில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, எப்போதும் வென்றான், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக காற்றாலை பண்ணை உரிமையாளர்கள், விவசாயிகளை மிரட்டி நிலங்களை பறித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், காற்றாலைகள் அமைப்பதற்கு 1,000 அடி ஆழம் வரையிலும் ஆழ்குழாய் கிணறு அமைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் நிலத்தடியில் கடல்நீர் உட்புகுந்து, விவசாயம் அழிந்து விடும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். காற்றின் ஈரப்பதமும் குறைந்து விடும். மேலும் காற்றாலைக்கு தேவையான சரள் மண்ணை கண்மாய், ஓடை போன்ற அரசு புறம்போக்கு நிலங்களில் முறைகேடாக எடுக்கின்றனர்.
அரசு புறம்போக்கு நிலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்கம்பங்களையும் நடுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், காற்றாலை நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று காலையில் கோயில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கு சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேசுநாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி ஆட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
