சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு வேண்டும் - பல்வேறு அமைப்புகள் சிவகாசியில் ஆர்ப்பாட்டம்...
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று விருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித் தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலர் விஸ்வைகுமார் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் சுப.இளங்கோ முன்னிலை வகித்தார். சிவகாசி நகரத் தலைவர் சி. கண்ணன் வரவேற்றார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஏ. ஞானசேகரன் தொடக்க உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,
மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்,
பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணித் தலைவி பெருமாளம்மாள், மாநில நிதிச் செயலர் விடுதலைவீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.