அப்பளமாக நொறுங்கிய மாருதி எர்டிகா..! முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் கார் விபத்தில் மரணம்..!
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே ஒக்கூரில் கார் விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் மூத்த அண்ணன் சேவ பாண்டியன் உயிரிழந்தார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருந்தவர் கோகுல இந்திரா.
கோகுல இந்திராவின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தரிகொம்பன். கோகுல இந்திராவின் மூத்த சகோதரர் சேவபாண்டியன், இன்று காலை ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மாருதி சுசுகி எர்டிகா காரில் சென்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள ஒக்கூர் அண்ணா நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது காரின் ஸ்டியரிங், திடீரென லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோகுல இந்திராவின் சகோதரர் சேவ பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை நகர போலீசார், சேவ பாண்டியனின் உடலைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த கோகுல இந்திரா சென்னையிலிருந்து கிளம்பி சிவகங்கைக்கு சென்று கொண்டிருக்கிறார்.