108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தில் கூட முறைகேடாம்! விசாரணை கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
திண்டுக்கல்
108 அவசர ஊர்தி சேவைத் திட்டத்தில் பணிபுரிபவர்களின் ஊதியம், வாகன பராமரிப்பு ஆகியவற்றின்பேரில் முறைகேடு செய்யும் தனியார் நிறுவனத்தின் மீது நீதி விசாரணை நடத்த வேண்டி திண்டுக்கல்லில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், மணிக்கூண்டு பகுதியில் 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பிரேம் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, "108 அவசர ஊர்தி தொழிலாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு வழங்கிய பணம் முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
108 அவசர ஊர்தி சேவை ஊழியர்களுக்கு அரசு அளித்து வரும் வருடாந்திர சம்பள உயர்வை முழுமையாக வழங்க வேண்டும்,
ஈட்டிய விடுப்புக்கான பணம், அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்கப்பட வேண்டும்.
108 அவசர ஊர்தி சேவைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம், வாகன பராமரிப்பு ஆகியவற்றின்பேரில் முறைகேடு செய்யும் தனியார் நிறுவனத்தின் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
பதினைந்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.