estate security guard killed by an elephant in the early morning ...

கன்னியாகுமரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கன்னியாகுமரியில் உள்ள எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் எஸ்டேட் காவலாளியை துரத்திவந்து தூக்கி வீசி காலால் மிதித்து காட்டுயானை கொன்றது.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கீரிப்பாறை வனப்பகுதி உள்ளது. இந்த வனத்தில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் ரப்பர், கிராம்பு, வாழை, தென்னை, கமுகு போன்றவை பயிரிடப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இந்த எஸ்டேட் பகுதிகளிலும், ரப்பர் தோட்டங்களிலும் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் வழக்கமாக நடக்கும் ஒன்றே.

மலைப்பகுதிகளில் வசிப்பவர்களும், எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்து வருகிறவர்களும் வனவிலங்குகளால் அடிக்கடி தாக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறும்.

இந்த நிலையில் மறாமலை வனப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கிராம்பு எஸ்டேட்டில் தொழிலாளர்கள் தங்கியிருந்து கிராம்பு பறித்து வருகிறார்கள்.

சிதறால் பள்ளிக்கோணம் பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் (68) என்பவர் அந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த பகுதியிலுள்ள ஓடை அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்டுயானை திடீரென்று அந்த பகுதியில் வந்தது. யானையை பார்த்ததும் ராஜலிங்கம் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தார். யானையும் விடாமல் அவரை கொஞ்ச தூரம் விரட்டிச் சென்றது.

பின்னர், துதிக்கையால் ராஜலிங்கத்தை தூக்கி வீசி அவரை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த ராஜலிங்கம் அலறிய சத்தம் கேட்டதும் எஸ்டேட் தொழிலாளர்கள் சிலர் அங்கு ஓடிவந்தனர்.

ஆட்கள் வருவதை பார்த்ததும் காட்டு யானை அடர்ந்த வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டது. பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அவசரஊர்தி மூலம் தடிக்காரன்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்ததும் கீரிப்பாறை காவலாளர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ராஜலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

எஸ்டேட் காவலாளியை காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.