போலீசை கண்டித்து மறியல் நடத்திய இசக்கிமுத்துவின் தந்தை, தம்பி கைது!
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் தவறான செய்திகளைப் பரப்புவதாக கூறி இசக்கிமுத்துவின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இசக்கிமுத்துவின் தந்தை, தம்பி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலெட்சுமி. இவர்களது மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா.
இசக்கிமுத்து நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். மனுக்கள் கொடுக்க வந்த ஏராளமானோரும் அங்கு நின்றனர். அந்த நேரத்தில் இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார்.
பின்னர் இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார். இதில் அவர்கள் 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது.
சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர். உடல் முழுவதும் கருகி உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடல் முழுவதும் பயங்கர தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீக்குளித்த 4 பேரில் 3 பேர் உயிர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். தாய் சுப்புலட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா. ஆகியோர் உயிர் இழந்தனர். மூவர் உயிரிழந்த நிலையில், இசக்கி முத்துக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று இசக்கிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இசக்கிமுத்துவின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இசக்கிமுத்து, குறித்து போலீசார் தவறான செய்திகளை பரப்புவதாக கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். உயிரிழந்த இசக்கிமுத்துவின் தந்தை பலவேசம், தம்பி கோபி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.