EPS letter MODI
இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 5 தமிழக மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகையும் உடனடியாக விடுவிக்க பிரதமர் தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் கேட்பாரின்றி கிடக்கும் தமிழக மீனவர்களின் 134 படகுகளை விடுவிக்கவும், தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து கடந்த 30-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மீனவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருநாட்டு அரசுகளும் தூதரகம் மூலமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிக்கும் வகையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தற்போது 134 தமிழக மீன்பிடிப் படகுகள் கேட்பாரின்றி கிடப்பதாகவும், இயற்கை சீற்றங்கள் காரணமாக இவை சேதமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அண்மையில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேசியபோதும், இந்தப் பிரச்னை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு உடனடியாக இலங்கை உயரதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி, படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் அவர்களது படகையும், ஏற்கெனவே இலங்கையில் உள்ள 133 படகுகளையும் விடுவிக்க தூதரகம் மூலமாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
