வேலை பார்க்கும் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்த ஊழியர்; ரூ.40 இலட்சம் மோசடி செய்ததால் கைது...
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் வேலை பார்க்கும் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.40 இலட்சம் மோசடி செய்த ஊழியரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர், மேலவீதியைச் சேர்ந்தவர் பாலாஜி (40). இவர் அதேப் பகுதியில் இருக்கும் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணி செய்து வருகிறார்.
இவர் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்துள்ளதாக வங்கியின் மேலாளர் கபாலீஸ்வரனுக்கு தகவல் ஒன்றுக் கிடைத்தது.
இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பாலாஜி கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்ததன்மூலம் ரூ.39 இலட்சத்து 46 ஆயிரத்து 206 மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி மேலாளர் கபாலீஸ்வரன், நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு காவலில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியாண்டி, உதவி ஆய்வாளர் சுமதி மற்றும் காவலாளர்கள் பாலாஜி மீது வழக்குப்பதிந்தனர். பின்னர், அவரை கைது செய்தனர்.
பாலாஜியிடம் இருந்த இரண்டு கார்கள், ஒரு வேன் ஆகியவற்றையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.