election commission submitted time table for election

உள்ளாட்சி தேர்தல் குறித்த உத்தேச அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.

ஆனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை எனவும், அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அணையம் தெரிவித்தது. 

இதைதொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசிற்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

மேலும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் உத்தேச அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இன்று உள்ளாட்சி தேர்தல் குறித்த உத்தேச அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.