நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை..! மறைமுகமாக ஒப்புக்கொண்ட கல்வி அமைச்சர்!
சென்னையில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் தேசிய அளவிலான பொதுநுழைவுத் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளதன் மூலம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை என்பதை மறைமுகமாக கூறுவதாக தெரிகிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்பது கொள்கை முடிவாக இருந்தாலும் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது அரசின் கடமை என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு மௌனம் காப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் கருத்து கூறமுடியாது என தெரிவித்துவிட்டார்.