கவலையை விடுங்க.. மின்கட்டணம் செலுத்த ஈசியான வழி… மின்வாரியம் சூப்பர் முடிவு..
தமிழகம் முழுவதும் டெபிட் கார்டு மூலம் இனி மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் டெபிட் கார்டு மூலம் இனி மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.
சென்னையில் 2017ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்த டெபிட் கார்டு முறை என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது டெபிட் கார்டிலும் மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட 325 மையங்களில் அதற்கான கருவிகள் தரப்பட்டன.
இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது. இதையடுத்து சென்னை போலவே மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறையை கொண்டு வரலாம் என்று மின்வாரியம் முடிவு செய்திருக்கிறதாம்.
டெபிட் கார்டு நடைமுறையில் தொடக்க காலத்தில் சில சிக்கல்கள் எழுந்தது. கட்டணத்தை அதற்கான கருவியில் ஊழியர்கள் பதிவேற்றும் போது தவறுகள் நிகழ்ந்தன. பின்னர் அவை சரி செய்யப்பட்டு விட வாடிக்கையாளர்கள் தரப்பில் இது வரவேற்பை பெற்றது.
இப்போது புதிய கருவிகள் தரப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டரில் மின் இணைப்பு எண்ணை டைப் செய்தால் எவ்வளவு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தானாக தெரிய ஆரம்பித்துவிடும். அதன் பின்னர் ரகசிய எண்ணை பதிவிட்டு பணம் செலுத்தலாம். ஆகையால் இந்த திட்டத்தை அடுத்து வரக்கூடிய காலங்களில் சென்னை போன்று மற்ற மாவட்டங்களிலும் விரைவில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டு உள்ளது.