ஒன்றரை இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து – இலக்கு வைத்த தருமபுரி ஆட்சியர்…
தருமபுரி
தருமபுரியில் வரும் ஜனவரி 28-ஆம் தேதி ஒன்றரை இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில், மாவட்டம் முழுவதும் சுமார் 1.62 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்கும் நோக்கத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டுக்கான முதல் தவணை முகாம் வரும் ஜனவரி 28-ஆம் தேதியும், இரண்டாம் தவணை முகாம் மார்ச் 11-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருக்கிறது.
இதற்காக தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்பட 984 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், 18 நடமாடும் முகாம்களும், 30 போக்குவரத்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்களில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும்.
இந்தப் பணிக்காக, மாவட்டம் முழுவதும் 4000 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் 1.62 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.