மின் கம்பியில் உரசிய கண்டெய்னர் லாரி! டிரைவர் சம்பவ இடத்திலேயே கருகி பலி!
லாரி மீது மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்தவர் லூர்துசாமி. இன்று அதிகாலை லூர்துசாமி, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளைக் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு சென்றார்.
தூத்துக்குடி - துறைமுகம் பைபாஸ் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திய லூர்துசாமி, சிறுநீர் கழிப்பதற்காக லாரியை விட்டு கீழே இறங்கினார்.
சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியபடியே நின்றது. அப்போது, திடீரென லாரியின் டயர் தீப்பற்றி எரிந்தது.
லாரியில் மின்சாரம் பாய்வதை அறியாத லூர்துசாமி, லாரியைத் தொட்டவுடன், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்த லாரி ஓட்டுநர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின் கம்பியில் உரசி லாரி டிரைவர் உயிரிழந்ததை அடுத்து, அவ்வழியே வந்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.