நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுறீங்களா..? உஷார்..
கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு அதிகமான தொகையை அபராதமாக விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவது இயல்பான நிகழ்வாகி விட்டது. இதனால், தமிழ்நாடு முழுவதுமே பரவலாக, நீராதாரங்களாக விளங்கிய நீர்நிலைகள், இன்று குப்பைகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.
இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதுடன், நீராதாரங்கள் அழிவதால், நீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறி, நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு நீர்நிலைகளை பராமரிப்பது, அரசின் கடமை மட்டுமல்ல. பொதுமக்களின் கடமையும் கூட.
மதுரை அனுப்பானடி, பனையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதால், கால்வாய்கள் குப்பைகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.
சுற்றுச்சூழலையும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு தானாக முன்வந்து இதுதொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழமையான மதுரை நகரின் பாரம்பரியத்தை கருத்தில்கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் நகரை முறையாக பராமரிக்க வேண்டும்.
கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு அதிகமான தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டும். மேலும் கால்வாய்கள் பராமரிக்கப்படுவது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.