Do not boycott poor people - Doctors emphasize after meeting Minister

முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நேற்றோடு முடிவடைந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், மற்றும் சுப்பிரமணியன் இரு வேறு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கவுன்சில் விதிப்படி புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியனும், 50 % இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக நீதிபதி சசிதரனும் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதில் முதுநிலை பட்ட படிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் கூறியதாவது:

மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.

முதுநிலை பட்ட படிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு புறக்கணித்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கபடுவார்கள். எனவே ஏழை மக்களை மத்திய அரசு புறக்கணிக்க கூடாது.

மாநில அரசின் கோரிக்கையும் எங்களது கோரிக்கையும் ஒன்றுதான் என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.