DMK consultation to prosecute the Tamil Nadu government

ஈரோடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதிக்கும் தமிழக அரசு மீது வழக்குத் தொடருவது குறித்து திமுக, வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசித்து வருகிறது என்று திமுக இளைஞர் அணி மாநில இணைச் செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், பெரியார் வீதியில் அமைந்துள்ள பெரியார் - அண்ணா நினைவகத்திற்கு நேற்று திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார், அவர், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், பெரியார், அண்ணா வசித்த இடங்களையும், அவர்களது அரசியல் நிகழ்வின்போது எடுத்த புகைப்படங்களையும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை வசித்த இல்லத்தையும், அலுவலக அறையையும் பார்வையிட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது:

“நாகப்பட்டினத்தில் அரசு போக்குவரத்துப் பணிமனையின் மேற்கூரை இடிந்து எட்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் துயரமானது.

முன்பு திருப்பூர் மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்தபோதே, இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை கணக்கெடுத்து அவற்றைச் சரி செய்யும் பணியில் அரசு முன்னெச்சரிக்கையுடன் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.

இனியாவது இதுகுறித்து கணக்கெடுத்து உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்புக் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான விமர்சனத்தை நீக்குமாறு பாஜகவினர் கூறுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய தணிக்கைக் குழுவின் அனுமதிக்குப் பிறகே திரைக்கு வந்துள்ளதால் பாஜக எதிர்ப்பதில் நியாயம் இல்லை.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களை அழைத்து வந்து செயற்கையாக கூட்டத்தை காட்டுகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அதற்கான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

அதிமுக இரட்டை இலை சின்னத்தைப் பெறும்வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதிக்கும் தமிழக அரசு மீது வழக்குத் தொடருவது குறித்து திமுக வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.