Asianet News TamilAsianet News Tamil

"சொகுசு கார்" கதை சொல்லி திருமண ஜோடிகளை வாழ்த்திய துணை முதலமைச்சர்...

Deputy Chief Minister congratulated wedding couples by saying luxury car story ...
Deputy Chief Minister congratulated wedding couples by saying luxury car story ...
Author
First Published Mar 27, 2018, 9:08 AM IST


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் நடந்த ஏழை ஜோடிகள் திருமண விழாவில் குட்டிக் கதை சொல்லி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜோடிகளுக்கு ஆசி மற்றும் அறிவுரை வழங்கினார். 

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் நடந்த ஏழை ஜோடிகள் திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அவர் பேசியது: "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 10700 திருமணங்களை நடத்தியிருக்கிறார். 

திருமணம் செய்து வைப்பதை, மறைந்த முதலமைச்சருக்கு செய்கின்ற பணியாக எண்ணி செய்து வருகிறோம். ஆனால், பல தலைவர்கள் பிறந்த நாளை எப்படி ஆடம்பரமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

மறைந்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி கட்டி காத்த அ.தி.மு.க.வை அழிக்க சிலர் துடிக்கின்றனர். நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பவருக்கு கிடைத்திருப்பது அணி. ஆனால் நமக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தந்திருப்பது கனி. இதயக்கனி. 

நம்மிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு கிடைத்திருப்பது அணி தான். அதுதான் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் நம்மை எதிர்ப்பவர்கள் காணாமல் போய்விடும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஏழை சிறுவன் ஒருவன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த காரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட காரின் உரிமையாளர், அந்த சிறுவனை காரில் உட்காரவைத்து கொஞ்ச தூரம் காரை ஓட்டிக் காட்டினார். அப்போது அந்த சிறுவன் ‘வாகனம் மிகவும் அருமையாக இருக்கிறது என்ன விலை“ என்று கேட்டான். அதற்கு காரின் உரிமையாளர், தெரியவில்லை இது எனது சகோதரர் எனக்கு பரிசாக கொடுத்தது என்று கூறினார்.

அதற்கு அந்த சிறுவன் உங்கள் சகோதரர் மிகவும் நல்லவர் என்றான். உடனே காரின் உரிமையாளர் அந்தச் சிறுவனைப் பார்த்து நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும் உனக்கும் என் சகோதரனைபோல் ஒரு சகோதரன் வேண்டும் என்று நினைக்கிறாய் அல்லவா என்று கேட்டார், அதற்கு அந்த ஏழை சிறுவன் ‘இல்லை. நான் உங்களின் சகோதரனை போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான்.

அதாவது வாங்கக் கூடிய இடத்தில் இல்லாமல் கொடுக்கக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தான். இந்த சிறுவனிடம் இருக்கும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையும். உங்களது இல்லற வாழ்க்கை சொர்க்கமாக அமைந்திடும்" என்று அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios