Chennai Flood: அப்பாடா… கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை மையம் ஹேப்பி தகவல்
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது.
சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் சேர்ந்து கொள்ள தமிழகத்தை மழை புரட்டி எடுத்தது.
கிட்டத்தட்ட ஒரு வார காலத்தை கடந்து மழை வெளுத்து கட்டியது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தென்காசி, கோவை, திருச்சி என மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை… மழை… மழையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு பெய்து மக்களை பரிதவிக்க வைத்தது.
சுரங்கபாதைகளில் நீர் தேங்கி அவரை மூடப்பட்டன. சாலைகளில் பள்ளம், மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் என கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாமல்லபுரம், ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகில் கரை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது.
இது கடந்த போது காற்றானது மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 65 கி.மீ வேகத்தில் பதிவாகியுள்ளது.தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும்.
சில இடங்களில் கன முதல் மிக கன மழையாக வட கடலோர தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் நாளை மழை தொடரும். 12ம் தேதி பெரும்பாலான இடங்களில் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கன மழை நீடிக்கும்.
சூறைக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில், சமயத்தில் 65 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியிலும், தமிழகம் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 12மணி நேரத்தில் படிப்படியாக குறையக்கூடும்.
கடல் அடுத்த 12மணி நேரத்திற்கு கொந்தளிப்பாக காணப்படும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்ககடல், தமிழக கடற்கரை பகுதி மற்றும் புதுச்சேரி,தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.