dengue is under control said minister vijayabaskar
தமிழகத்தில் தீவிரமாகப் பரவிவரும் டெங்குவைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கடந்த வாரத்தைவிட இந்தவாரம் டெங்கு பாதிப்புகளும் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தெரிவித்தார். டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காய்ச்சல் வந்தால், பாட்டி வைத்தியமோ அல்லது மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தோ தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு வலியுறுத்தினார். சுயமாக மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் எனவும் அரசு மருத்துவமனைகளை அணுகுமாறும் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.
டெங்குவைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காகவும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
