demolition of chennai silks started

திநகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி விட்டது. 2 ராட்சத ஜா கட்டர் வாகனங்களை பயன்படுத்தி இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் அருகே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை திநகரிர் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் முழுவதும் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை சுவர் திடீர் என இடிந்து விழுந்தது.

மேலும் நேற்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் கட்டிடம் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் கட்டிடம் உறுதி தன்மை இழந்துள்ளதால் 3 நாட்களில் தரைமட்டமாகும் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று இடிக்கும் பணிக்கான ஆயத்த வேலைகள் முடிவுற்ற நிலையில், தற்போது 2 ராட்சத ஜா கட்டர் வாகனகளை கொண்டு கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.

தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் மேலிருந்து கீழாக இடிக்கப்பட உள்ளது.

கட்டடம் இடிக்கும்பணியை சைதாபேட்டையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3நாட்களில் கட்டிடம் தரைமட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தை இடித்து அகற்றும் வரை பொதுமக்கள் யாரும் இப்பகுதி அருகே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.