delhi farmers protest vabus and until may 25 by ayyakannu

டெல்லியில் 41 நாட்கள் நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 30 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

41 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நிதி ஆயாக் கூட்டத்தில் கலந்து டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது நிதி ஆயாக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

அதன்படி நிதி ஆயாக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வருகை தருமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு அழைப்பு விடுவித்தார்.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் வாபஸ் பெறுவதாக தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களது கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.