நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்கள் பணத்தட்டுப்பாட்டால் பூட்டியே கிடப்பதால் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் இந்த மாத சம்பள பணத்தை எடுப்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததோடு, புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்திற்கு விட்டார். இதில் புதிய ரூ.500 நோட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வரவில்லை. அதில், ஊட்டியும் ஒன்று.

மேலும், மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தாலும் அதற்கு பதிலாக சில்லறைகள் கிடைப்பதில்லை. 2000 ரூபாய் சில்லறைக்கு 500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் தான் சில்லறை எங்கின்றனர். இதனால் வியாபாரிகள் தொழிலாளர்கள் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் போடப்பட்டு வருகிறது. சம்பளம் வழங்கப்பட்ட போதிலும் அதனை எடுக்க முடியவில்லை. ஊட்டியில் உள்ள ஏ.டி.எம்.கள் பெரும்பாலும் பணமின்றி பூட்டியே கிடக்கிறது. பணம் இருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.களிலும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பணம் எடுக்க நெடுநேரம் காத்து கிடக்கின்றனர்.

மேலும் முதியோர் உதவிதொகை, விதவை உதவி தொகையும் எடுக்க முடியாத அவல நிலையில் பெண்களும், முதியோர்களும் உள்ளனர். இந்த மாத சம்பள பணத்தை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். பணம் எடுக்க முடியாததால் இந்த மாத அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்து.