சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே பொன்னாங்காணி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போகம்பட்டி பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரது இருசக்கர வாகனம் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமு, மயில்சாமி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமுவிடம், ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மயில்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி ராமுவின் வீட்டிற்கு சென்ற மயில்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை கடுமையாக தாக்கியதுடன், அவரது வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராமுவை, உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து ராமுவின் மனைவி லட்சுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், ராமு நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமு உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, ராமுவை தாக்கிய நபர்களை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
