Dali 69 kg of gold in the gold project given by the AIADMK government in six years Minister thankamani

நாமக்கல்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவி விழாவில், 2011–ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 ஆயிரத்து 496 பெண்களுக்கு 69 கிலோ 984 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதியோர் தின விழா மற்றும் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தவிழாக்களில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மிக மூத்தோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

மேலும் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கினர்.

இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி பேசியது:

“நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011–ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 ஆயிரத்து 496 பெண்களுக்கு ரூ.66 கோடியே 96 இலட்சம் மதிப்பீட்டில் திருமண நிதி உதவியும், 69 கிலோ 984 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பெற்று உங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் தங்கமணி பேசினார்.

இந்த விழாவில் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தெரிவித்தது:

“தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மாதம் வரை 8 இலட்சத்து 57 ஆயிரத்து 566 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 873 கோடி திருமண நிதி உதவியும், 3 ஆயிரத்து 503 கிலோ தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் வரை 955 ஆண் குழந்தைகளும், 4 ஆயிரத்து 48 பெண் குழந்தைகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 3 குழந்தைகள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றனர்” என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

மேலும், இந்தவிழாவில் சமூக நலத்துறையின் சார்பில் 428 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியுடன், ஒரு கிலோ 712 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

மேலும் இலவச தையல் எந்திரம், உதவித்தொகை பெறுவதற்கான ஆணை என மொத்தமாக 506 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 594 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் உதவி ஆட்சியர் ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் பாலச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முரளிகிரு‌ஷணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.