ஆழ்குழாய் கிணற்றில் நீருடன் கச்சா எண்ணெய் கலந்து வெளியேற்றம்; நெடுவாசல் மக்கள் பெரும் அச்சம்...
புதுக்கோட்டை
நெடுவாசலை அருகேயுள்ள விவசாயி 300 அடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீருடன் கச்சா எண்ணெய் கலந்து வெளியேறியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பொன்.ரவிச்சந்திரன். இவருக்கு அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள விவசாய நிலங்களில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு சுமார் 300 அடியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் பார்த்து வந்தார்.
நேற்று மாலை தோட்டத்திற்குச் சென்ற ரவிச்சந்தரன் ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டாரை போட்டுள்ளார். ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீருடன் கச்சா எண்ணெய் திரவம் கலந்து வந்துள்ளது.
ஆரம்பத்தில் கலங்கலான தண்ணீரும் வெந்தாலும், நல்ல தண்ணீர் வரும் என்று காத்திருந்தார். ஆனால், வெகுநேரமாகியும் நீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்ததை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல மாதங்களாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்ட நிலையில், நெடுவாசல் , வடகாடு அருகேயுள்ள கிராமமான கொத்தமங்கலத்தில் விவசாய பயன்பாட்டிற்காக சுமார் 300 அடியில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் திரவம் நீருடன் கலந்து வெளிவருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் திரவம் வெளியேறுவது குறித்து கொத்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் புஸ்பராஜ் அளித்த தகவலைத்தொடர்ந்து, ஆலங்குடி வட்டாட்சியர் எஸ். ராஜேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.