சென்னையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,34,715 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,34,715 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 719 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,90,346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,599 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 07 பேரும், அரசு மருத்துவமனையில் 06 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 120 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,59,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் அண்ணா பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த 9 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகள், கேன்டீன்களில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கட்டாயம் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

18 வயதிற்கு மேலுள்ள கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான, செவிலியர் கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 210 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் ஒன்பது பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 12 ஆக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள பல்கலைகழகம், கல்லூரி வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் கேன்டீன்கள் என அனைத்து இடங்களிலும் மாணவர்கள் தடுப்பு விதிகளை கடைப்பிடிப்பதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
