court orders to jabti 13 officers including the Collector Revenue Officer
மதுரை
நிலத்திற்கான இழப்பீட்டு தொகை தராததால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்பட 13 அதிகாரிகளின் கார்களை ஜப்தி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், நிலையூர் கால்வாய் அமைக்கும் பணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு சிலரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன்படி, பெருங்குடியைச் சேர்ந்த அடைக்கண், அழகம்மாள் ஆகியோரின் 69 சென்ட் நிலத்திற்கு ரூ.20 ஆயிரத்து 500 இழப்பீடும், கண்ணன், தெய்வக்கனி ஆகியோரின் 21 சென்ட் நிலத்திற்கு ரூ.7 ஆயிரத்து 600 இழப்பீடும் வழங்கப்பட்டது.
ஆனால், அவர்கள் இந்தத் தொகையை ஏற்க மறுத்து அவர்கள் உதவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அடைக்கண் மற்றும் அழகம்மாளுக்கு ரூ.21 இலட்சத்து 42 ஆயிரமும், கண்ணன், தெய்வக்கனிக்கு ரூ.9 இலட்சத்து 19 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்பட வில்லை.
இந்த உத்தரவை நிறைவேற்றக்கோரி அவர்கள் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, "இழப்பீட்டு தொகை வழங்காததால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்பட 13 அதிகாரிகளின் கார்களை ஜப்தி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலுடன் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவை காட்டி ஆட்சியர் காரை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள், அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
"விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்" என்று கூறியதால், நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
