நிலத்தகராறில் தம்பி வயிற்றில் கத்தியை சொருகிய அண்ணன்…
செங்கம்
திருவண்ணாமலையில் நிலத்தகராறில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
செங்கம் அருகேயுள்ள மேல்செங்கம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு முருகன் (40), நாகப்பன் (35) என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு பேருக்கும் அருகருகே வீடு உள்ளது.
ஏழுமலைக்கு ஊரின் எல்லையோரம் 6½ ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக இருக்கிறது. இந்த நிலத்தை சரிசமமாக பிரித்து கொள்வது தொடர்பாக மகன்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த பிரச்சினையில் அவர்கள் இருவரும் பகையை வளர்த்துக் கொண்டனர்.
நேற்று முன்தினம் நிலத்தை பிரிப்பது தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் இருவரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் விலக்கிவைக்க அவர்கள் இவருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை நாகப்பனின் வயிற்றில் சொருகினார். இதில் இரத்த வெள்ளத்தில் நாகப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நாகப்பன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா கொலை நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் முருகனை கைது செய்தார்.
இதுதொடர்பாக மேல்செங்கம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிலத்தகராறில் தம்பியை கத்தியால் குத்தி அண்ணன் கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.