கொரோனாவை ‘ஓட’ வைக்க தமிழக அரசின் விடா முயற்சி… தொடங்கியது தடுப்பூசி முகாம்…
தமிழகம் முழுவதும் இன்று காலை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி இருக்கிறது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. அதன் முக்கிய நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 12ம் தேதி, செப்டம்பர் 19ம் தேதிகளில் முதல் மற்றும் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் திரண்டு வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதையடுத்து 3ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த தமிழக அரசு ஆயத்தமானது. அதன்படி இன்று காலை 7 மணியளவில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் தொடங்கி இருக்கிறது.
தமிழகம முழுவதும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த முகாம்களில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இன்றைய தினம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. எங்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்பதை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.