கண்டெய்னர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி; உடன் சென்ற நண்பருக்கு பலத்த காயம்...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மெக்கானிக் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் பலத்த காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனப்பா. இவருடைய மகன் மஞ்சுநாத் (30). இவர் சூளகிரியில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாது என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை மஞ்சுநாத் தனது நண்பர் ராமுவுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அலகுபாவி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர் ராமு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ராமுவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சூளகிரி காவலாளர்கள் வழக்குப்பதின்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.