காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று விட்டு வீடு திருப்பும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து காங்கிரஸ் கமிட்தி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜ், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய உயிரிழந்த சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சாலை அருகில் நின்றுகொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அளவூர் வி. நாகராஜ் அவர்கள் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரவும் அடைந்தேன். 

கே.எஸ் அழகிரி இரங்கல்

ஐந்து மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன். அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக் கூடாத ஒருவரை இழந்து விட்டோம். காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த ஒரு செயல் வீரராக அவர் திகழ்ந்தார்.

திரு அளவூர் நாகராஜ் அவர்களது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவுடன் கூட்டணியை முறித்த கையோடு நயினார் நாகேந்திரனின் சகோதரரை அதிமுகவிற்கு தட்டி தூக்கிய இபிஎஸ்