Conduct local elections according to existing wards No need to separate the wards ...

திருநெல்வேலி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏற்கனவே உள்ள வார்டுகளின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். வார்டுகளை பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் மனு கொடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வார்டு எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்த ஆட்சேபனைகள் இருந்தால் மனுக்களாக கொடுக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் தங்கள் வார்டுகளை மாற்றி அமைக்கக்கூடாது என மனுக்களை கொடுத்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 55 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் சிலர் தங்கள் தெருக்களை மாற்றி அமைக்கக் கூடாது என்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 180-க்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்கள் வந்தன.

அவர்கள் கடிதம் மூலம் அழைக்கப்பட்டு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், கடிதம் அனுப்பப்பட்டவர்களை தவிர பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டு வந்து இருந்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த ஹைதர் அலி, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் முகமது அலி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல்காதர், உதயகுமார்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மீரான்மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் ஒருசிலர் தங்கள் மண்டலங்களை பற்றி கருத்து கேட்க வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலமாக கருத்து கேட்கப்படும் என்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் நாராயணநாயர் அறிவித்தார்.

முதலில் தச்சநல்லூர் மண்டலம் கருத்து கேட்கப்படும். மற்ற மண்டலங்களை சேர்ந்தவர்கள் வெளியே உட்காருங்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் மண்டல பகுதியில் 10 வார்டுகளுக்கு முதலில் கருத்து கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலமாக கருத்து கேட்கப்பட்டது. பலர் வார்டு பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், “திருநெல்வேலி மாநகராட்சி எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். அதன்பிறகு வார்டுகளை பிரிக்க வேண்டும்.

அதிக மக்கள் தொகை உள்ள வார்டுகளை பிரிப்பது தவறு இல்லை. ஆனால் குறைந்த மக்கள் தொகை உள்ள வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே உள்ள வார்டுகளின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். வார்டுகளை பிரிக்க வேண்டிய அவசியமில்லை“ என்று கூறப்பட்டு இருந்தது.