Complaint to the forest department The owner is angry because of the removal of cucumber plants ...

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் பயிரிட்டிருந்த வெள்ளரி செடிகளை வனத்துறையினரால் வெட்டி அகற்றியதால் கோபமடைந்த உரிமையாளர் வனத்துறையினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் எஸ்.தெட்சிணாமூர்த்தி. இவர், அந்தப் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்திலும், அருகே உள்ள இடத்திலும் வெள்ளரி சாகுபடி செய்துள்ளார்.

தனது அருகில் உள்ள இடம் என தெட்சிணாமூர்த்தி குறிப்பிடும் இடம், வனத்துறைக்குச் சொந்தமான இடமாம். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஆய்வு நடத்திய வனத்துறையினர், வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரி செடிகளை அகற்ற வேண்டும் என்று தெட்சிணாமூர்த்திக்கு உத்தரவிட்டு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், வனத்துறை அலுவலர்கள் நேற்று காலை தெற்குப் பொய்கைநல்லூர் பகுதிக்குச் சென்று, வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தெட்சிணாமூர்த்தி பயிரிட்டிருந்த வெள்ளரி செடிகளை அகற்றி, அருகில் உள்ள ஒரு குட்டையில் கொட்டி மூடிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, தன்னால் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெள்ளரி செடிகளை வெட்டி அகற்றிய வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் தெட்சிணாமூர்த்தி.

அந்தப் புகாருக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.