’இந்த’ மீன்கள் சாப்பிட்டால் எலும்பு, மூளை வளர்ச்சி பாதிக்கும்... - வேறு எங்கும் இல்ல...! தமிழ்நாட்டில்தான்...!
சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியில் சாம்பல் கொட்டப்பட்ட விவகாரத்தில் மீன்களில் காட்மியம் மற்றும் லெட் போன்ற கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எண்ணுர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள், குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதாகவும், இந்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதால், வெளியேற்றப்படும் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதாகவும் ரவிக்குமார் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் எண்ணூர் அனல்மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்த ஆய்வுக்குழு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றுக் கழிமுகத்தில் ஆய்வு செய்தது. இதற்கான ஆய்வறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், மீன்களில் காட்மியம் மற்றும் லெட் போன்ற கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்களை உண்பவர்களுக்கு எலும்பு மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கும் எனவும் இறால், முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காயில் அனுமதிக்கப்பட்டதை விட லெட் கன உலோகம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நண்டில் 4.85 மில்லி கிராம் லெட், 1.37 மில்லி கிராம் காட்மியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.