கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் இருப்பு உள்ள பணத்தை, அனைத்து வங்கிகளிலும் செலுத்தி ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், வங்கிகளின் வாசலில் பணத்தை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். இப்படி பணத்தை மாற்றினாலும், புதிய ரூ.2,000 நோட்டுகள், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 மற்றும் 10, 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகின்றன.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள், ஏ.டி.எம்.களை மக்கள் இரவு பகலாக தவமாய் தவம் இருந்து வருகின்றனர். இந்த நிலை இதுவரை மாறாமல் உள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த 10ம் தேதியில் இருந்து மக்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் ரூ.4 ஆயிரத்துக்கு 100, 50 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி முதல் இந்த தொகை ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. கூடுதலாக வழங்கப்படும் 500 ரூபாயை 5 ரூபாய் நாணயமாக பிளாஸ்டிக் கவரில் போட்டு, ரிசர்வ் வங்கி அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.
ஆனால், இந்த பண பரிமாற்றம் நேற்று மீண்டும் மாற்றப்பட்டது. ரூ.4,500 ரூபாய்க்கான மாற்றுத்தொகையாக ரூ.2 ஆயிரம் புதிய நோட்டு ஒன்றையும், மீதித் தொகையான ரூ.2,500க்கு 10 மற்றும் 5 ரூபாய் நாணயங்களையும் ரிசர்வ் வங்கி வழங்கியது. இதற்கு பொதுமக்கள் பலர் அதிருப்தி தெரிவித்து சென்றனர். நேற்று மட்டும் 3000க்கு மேற்பட்டோர் ரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்றிச்சென்றனர்.
