மூடுபனியால் சூழ்ந்தது குட்டி கொடைக்கானல்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி; வாகன ஓட்டிகள் அவதி…
ஈரோடு
கடும் மூடுபனியால் திம்பம் மலைப்பகுதி சூழப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. பண்ணாரியில் இருந்து 27 கொண்டை ஊசிகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதையின் இரு பக்கத்திலும் அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டது. மேலும், இது கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்டது.
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையின் இரு பக்கத்திலும் உள்ள வனப்பகுதி பசுமையாக மாறி குளிர்ந்து காணப்படுகிறது. இதனால்தான் திம்பம் மலைப்பகுதியை குட்டி கொடைக்கானல் என்றும் அழைப்பர்.
நேற்று காலை 6 மணி முதல் பகல் 10.30 மணிவரை திம்பம் மலைப்பாதையில் கடும் மூடுபனி நிலவியது. 10–வது கொண்டை ஊசிக்கு மேல் குளிர்ச்சி அதிகமாக இருந்தது. 22–வது கொண்டை ஊசியில் இருந்து திம்பம் மற்றும் கொள்ளேகால் பிரிவு வரை கடும் மூடுபனி ஏற்பட்டது. இதனால் 10 அடிக்கு முன்னால் இருப்பது கூட கண்ணுக்கு தெரியவில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். சுற்றுலாப் பயணிகள் இந்த மூடுபனியை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது வனப்பகுதிக்குள் சென்று புகைப்படம் எடுக்கவோ வனத்துறை தடை விதித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனத்தில் இருந்தபடியே மூடுபனி பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.