கடலோர மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் இரவில் விட்டு விட்டு இடியுடன் மழை..! வானிலை மையம் தகவல்..!
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழையும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலசந்திரன், தென்மேற்குவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரைவரை நிலவி வருவதாக தெரிவித்தார்.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் விட்டு விட்டு கனமழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என பாலசந்திரன் தெரிவித்தார்.