Asianet News TamilAsianet News Tamil

திமுக மற்றும் அதிமுகவினரிடையே பயங்கர மோதல்; 11 பேர் பலத்த காயம்; 25 பேர் மீது வழக்குப் பதிவு...

Co-operative Union Elections - fight between DMK and AIADMK 11 people injured 7 arrested
Co-operative Union Elections - fight between DMK and AIADMK 11 people injured 7 arrested
Author
First Published Apr 25, 2018, 9:49 AM IST


இராமநாதபுரம் 

இராமநாதபுரத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும், மோதல் குறித்த புகாரின்பேரில் 25 பேர் மீது வழக்கு பதிந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் காவல் சரகம் மருதங்கநல்லூர் கிராமத்தில் உள்ளது ஆனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். 

இங்கு கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் 15 பேரும், அ.தி.மு.க. சார்பில் தற்போதைய கூட்டுறவு சங்க தலைவர் வன்னிமுத்து தலைமையில் 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் வன்னிமுத்து தரப்பை சேர்ந்த சரசுவதி, கதிர்வேலம்மாள், வன்னிமுத்து, தனிக்கொடி, செல்வம், செல்லையா உள்பட 8 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த தியாகராஜன், முரளி, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனே இராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதுகுறித்து தனுஷ்கோடி என்பவர் அளித்த புகாரின்பேரில் தியாகராஜன், ராமையா, முனீசுவரி, ராஜாமணி அம்மாள் உள்பட 12 பேர் மீதும், இதேபோல முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வன்னிமுத்து, முத்துராமலிங்கம், அருள்பாண்டி, செங்கோட்டையன் உள்பட 13 பேர் மீதும் பேரையூர் காவலாளர்கள் தனித்தனியே வழக்குப் பதிந்தனர். மேலும், இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த ஏழு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios